தாய் மண்





அநாதையாய் கிடந்த இந்த விதையை
உள்வாங்கி உயிர் தந்தது நீயல்லவா.

வாழ்வின் அத்தியாயம் துவங்கியதே
உன்னில் நான் பிறந்த அந்த கணத்தில் தான்.

இருளின் ஆழங்களில் உருக்குலைந்து
இரணங்களில் புதையுண்டிருந்த என்னை
மெல்ல மெல்ல தூக்கி விட்டதும்
முளைக்க சொல்லி ஊக்குவித்ததும்
காற்றோடு கலந்த ஈரம் போல
ஞாபகப்பசையாக ஒட்டியிருக்கிறதே
என் இலைகளில்.

உன்னுள் மூழ்கி மாசற்று வெளிவந்து
முளைவிட்டபோதுதான் முதன்முதலில்
விடியல்தரிசித்தது என் குறுந்தளிர்.


தன்னையே குழைத்து நேசம் நிறைத்து
நீ அனுப்பிய நீர் தானே இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறது என் நரம்புகளில்
பச்சைக் குருதியென.

மறதியின் பூமியில்
நிறமிழந்து நிற்கையில்
நீரூட்டிய உன் மீது தான்
மலர்களும் கனிகளும்
ஏன், சருகுகளும் கூட
உதிர்த்திட ஆசிப்பது
நியாயமில்லையா?

எங்கு பற்றி படர்ந்தால் என்ன
இன்னும் இன்னும் ஆழமாக
உன்னுள் இறங்கத்தானே
பிரியப்படுகின்றன என் வேர்கள்

சீதோஷ்ண நிலை
எத்தனை சிறப்பாய் இருந்தால் என்ன
உனை நீங்கினால்
செத்து போய் விடுமே என் செல்கள்

முளைத்து தழைத்த
மண்ணை விட்டு விலகி
வேறிடம் போக வேண்டுமா?
வாழ்ந்து திளைத்த
என் உலகம் சுருங்கி
சிறு தொட்டிக்குள் அடங்கிடுமா?

இடம் பெயர்தல் --
செடியின் வாழ்வில் மற்றுமொரு
நிகழ்வு அல்ல.
அழிவு.


வேறு யாருக்கும் தான் புரியவில்லை
உயிர் கிழியும் இந்த வேதனை.
உனக்கும் கூடவா
என் ஜீவ நிலமே.


~.~. ஜெ. சி. நித்யா ~.~.


Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.