Tuesday, February 26, 2008

அஞ்சலி...20.2.2008




உதிரும் இலைகளின் மரணத்திற்காக
நிற்பதில்லை பூமியின் சுழற்சி.

நிகழ்ந்து மடியும் நிமிஷங்களின் மரணத்திற்காக
நிற்பதில்லை மனிதனின் செயல்கள்.

ஆனால்,
நான் நிற்கிறேன் இங்கு
உ. .தி. .ர். .ந். .த. . மலரே,
உனக்கு அஞ்சலி செலுத்த.

வாழ்ந்த நிமிஷங்களிலெல்லாம்

மகரந்தங்களால் வாசனை தூவி,

கூம்பியிருந்த மனங்களை மலர்த்தி,

நசுக்கியவருக்கும் நறுமணம் ஈந்து,


உன்னத பணி செய்கிறோம்
என்ற பெருமை சிறிதுமின்றி,

படைத்தவரின் நோக்கம்
பிறழாமல் நிறைவேற்றி,

மகிழ்ச்சியாய் மரித்தாயோ...
நறும் பூவே,

நீ ஒன்றும் மண்ணில் வீழ்ந்திடவில்லை
மற்றுமொரு சருகாய் மாறிவிட...

என்னைப் போலவே
உன்னை நேசிக்கும்
ஆயிரமாயிரம் மனங்களில்
விழுந்திருக்கிறாய் விதையாக.

மீண்டும் முளைத்திடுவாய்,
உனைப்போல் வாழும் ஆசையை
துளிர்க்கச் செய்வாய்,
என்றென்றுமாக வாழ்ந்திருப்பாய்,

வாடாத நினைவாக...


கசியும் விழிகளுடன்,
JC நித்யா.

Saturday, February 9, 2008

"ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!"



இந்த தொடர் ஓட்டத்தில் எழுத அழைத்த Sathish க்கு என் நன்றி!
எனது மொத்த பதிவுகளே 5 தானே Sathish!
இதில் எதை குறிப்பிடுவது? :)
ஏதோ ஒரு வலி நேரத்தில் எழுதப்பட்டது தான் ஒவ்வொன்றுமே.

எந்த தேடல் என்னை வாழச் செய்கிறதோ
எந்த தேடல் என்னை வளரச் செய்கிறதோ...

எந்த தேடல் என்னை எரியச் செய்கிறதோ
எந்த தேடல் என்னை எரித்துக் கொண்டிருக்கிறதோ...

எந்த தேடல் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கியதோ
எந்த தேடலில் நான் முற்றிலும் தொலைந்து போகிறேனோ...

அதைப் பற்றி எழுதியதே நான் நேசிக்கும் ஒன்று.

இந்த தேடல் தான் என் சுகம்.
இந்த சுகம் தான் என் வலி.
இதுவே நான்.

கை நீட்டும் குழந்தையை
பிடித்துக் கொள்ளும் தாயின் விரல்கள்...

துவண்டு நிற்கும் கன்றுக்குட்டியைத்
தடவி கொடுக்கும் தாய்ப் பசு...

புழுதிச் சாலையில் செல்லும் பேருந்திற்குள்
ஒரு சில நிமிடங்கள் வந்து சென்ற வண்ணத்துப்பூச்சி...

சரிவிகிதத்தில் ஈரமும் இதமும் கலந்து
சில்லென்று முகத்தில் மோதிச் செல்லும் காற்று...

கவனிக்க யாருமில்லை எனினும்
ஆனந்தமாய் புன்னகைக்கும் காட்டுப் பூக்கள்...

நேற்று பெய்த மழையில் குளித்ததினால்
மகிழ்ச்சியோடு சிரித்திருக்கும் இலைகள்...

இப்படி எதெதிலோ
.உ.ன்.னை.
தேடிக் கொண்டிருக்கும்
நான்...