இதோ வந்திருக்கிறேன்
பலியிட.
இன்று இல்லையேல்
என்றும் இல்லை.
உயிர் கரைய நேசித்திடும்
விழி விரிய இரசித்திடும்
என் செல்வப் புதல்வனை
நான் நினைத்து நினைத்து
பெருமிதப்படும் ஒரேயோர் காரணத்தை
வெகுநாட்கள் கனவாகவே இருந்து
நனவானதொரு அற்புதத்தை
களங்கமில்லா நேசம் ஊற்றி வளர்த்த
உயிர் பந்தத்தை
பெற்ற வரங்களிலேயே விலைமதிப்பற்ற
என் ஜீவ பொக்கிஷத்தை
இதோ வைக்கிறேன்
பலிபீடத்தில்.
வேண்டாம் - என
இப்போதும் சொல்ல முடியவில்லை.
என்றாலும் இதோ
கீழிறக்கி வைக்கிறேன்.
கடைசியாய்
ஒருமுறை பார்த்துக் கொள்ளட்டுமா?
நேசிக்கிறேனென
ஒருமுறை சொல்லிக் கொள்ளட்டுமா?
வலித்திடுமே
மன்னிப்பு கேட்டுக் கொள்ளட்டுமா?
வேண்டாம்.
ஏதும் செய்வதற்கில்லை.
இதோ தருகிறேன்
முற்றிலுமாக.
தந்தது நீ தானே
எடுத்துக் கொள்ள
எல்லா உரிமையும் உண்டு.
கனவை நனவாக்கியது
நீ தானே
நனவை நினைவாக்க
உரிமை உண்டு.
முழுவதும் சம்மதம்.
உயிரானவரே,
உம்மை விட
உயிருக்கு நெருக்கமானதென்று
வேறேதுமில்லை.
இருந்திடவும் வேண்டாம்.
வலியுடன்,
ஆபிரகாம்.
~.~. JC நித்யா ~.~.