தலைசாய்க்க ஓர் இடம்




எங்கு நான் நானாக ஏற்றுக்கொள்ளப்படுவேனோ..
எங்கு இளைப்பாறல் விமர்சனமின்றி நிகழுமோ
எங்கு கேள்வியின் துளைகளால் தனிமை தொய்ந்து போகாதிருக்குமோ..
எங்கு கவலைகள் தொலைத்து, பயங்கள் களைந்து, தீர்ப்பிடல்களற்று சுதந்திரமாய் சுவாசிக்க முடிகிறதோ..

சிட்டுக்குருவியின் சிறகுகள் வாங்கி பறந்து செல்ல
தவிக்கிறது உள்ளம்.

எங்கு இருக்கிறது எனக்கான ஒரு இடம்?





~. ~. ஜெ. சி. நித்யா ~.~.



நான்





நான் தேவதை அல்ல.
சிலாகித்து நீ எழுதும் கவிதையின்
வர்ணனைகளில் என்னை தொலைப்பதற்கு.

நான் விளக்கும் அல்ல.
சாதுர்யமாய் நீ வகுக்கும் எல்லைகளுக்குள்
என் ஒளியை சுருக்கி கொள்வதற்கு.

சுவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்
உன் அங்கீகாரமோ அனுமதியோ தேவைப்படாத
சக மனுஷி நான்.

சம்மதமெனில் சொல்.
பூக்கள் ரசித்தபடி
சேர்ந்து நடக்கலாம்
தகுந்த இடைவெளி விட்டு.


~.~. ஜெ.சி. நித்யா ~.~

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.