பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!







என்ன சொல்லி வாழ்த்துவது? என் உயிரானவர் புவி வந்து உதித்த பொன் நாளில்.

கண்களில் வெளிச்சம் தெறிக்க பூத்த முதல் புன்னகையை ரசிக்க, தாய்முகம் நோக்கி அழுத விழிகளில் கசிந்த முதல் துளியில் நனைய, குழந்தையாய் நினைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

மாட  மாளிகையில் ஏதோ நான்கு சுவர்களுக்குள் நடந்திருந்தால் இந்த காவியத் தன்மையும் மனதிற்கு நெருக்கமும் இல்லாது போயிருக்குமோ என்று தான் மாட்டுத் தொழுவத்தில் வந்து உதித்தாயோ உயிர் தெய்வமே.

பத்து மாதம் துளித்துளியாய் தேக்கி வைத்திருந்த பாசமெல்லாம் சேர்த்தெடுத்து விழிகளில் தேக்கி முதல் பார்வை பதித்திருப்பாளோ அந்த பவித்திர தாய்?

அவள் கண்கள் உன்னோடு என்ன பேசியிருக்கும்? இந்த நிமிடத்திற்காகவே தான் பிறந்ததாக எண்ணி புளகாங்கிதம் அடைந்திருப்பாளோ? குனிந்து நின் நெற்றியில் முத்தமிட்டபோது அத்தனை நட்சத்திரங்களும் அவள் மீது பொறாமை கொண்டிருக்குமோ?

உலகத்தையே இரட்சிக்க வந்த திருக்குழந்தையை ஏந்திய கரம் தன்னுடையதென பெருமிதம் கொண்டிருப்பாரா நின் தந்தை?

தங்களிடமிருந்த துணிகளில் உனை சுற்றியபோது அண்ட சராசரத்தையும் வார்த்தையாலேயே சிருஷ்டித்த தெய்வத்திற்கு அணிவிக்கும் முதல் ஆடை இதுவா என அங்கலாய்த்திருப்பார்களா நின் அன்னையும் தந்தையும்?

அந்த பிஞ்சு முகம், சிறிய கண்கள், அழகிய இதழ்கள், பூ கைகள், சிறு விரல்கள், கனிந்த பாதங்கள்... ஒரு கோடி கண்கள் கொண்டு பார்க்க வேண்டும் அந்த பேரழகை.

தன்னையே தாழ்த்தி இப்படி எளிமையானதொரு ஆரம்பத்திற்கு உன்னையே உட்படுத்திக்கொள்ள எப்படி முடிந்தது? ஏன் மனுவர்க்கத்தை இத்தனை நேசித்தாய், என் இறைவா?!!

உலகெல்லாம் உன் அன்பே நிறைந்திருக்க, உன் வெளிச்சமே பிரகாசிக்க, நீ அருளிய அமைதியே நிலைக்க வாழ்த்துகிறேன், இன்றும் என்றும்.







இருப்பு





நம்பிக்கைகள் அற்று
அர்த்தங்கள் இழந்து நொறுங்கியிருக்கும் போதிலும்
சாவதற்கான ஒரு காரணம் கூட தென்படவில்லை.
வாழ்வதற்கான மிகப்பெரிய காரணமாக
நீ இருப்பதால்.

சிதைவுகளின் நடுவே மிளிரும் தீபமாய்
நின் விழிகளில் இன்னமும் நான் இருக்கிறேன்
என்ற நினைப்பே உயிருடன் வைத்திருக்கிறது
என்னை.

மனம் நோக புண்பட்டாலும்
எனக்கான எல்லாம் இழந்திட்டாலும்
நீ அழைக்கும் வரை வாழ்ந்திருப்பேன்
உயிர் சூரியனே
உனக்காக.


~.~. ஜெ. சி. நித்யா .~.~

தலைசாய்க்க ஓர் இடம்




எங்கு நான் நானாக ஏற்றுக்கொள்ளப்படுவேனோ..
எங்கு இளைப்பாறல் விமர்சனமின்றி நிகழுமோ
எங்கு கேள்வியின் துளைகளால் தனிமை தொய்ந்து போகாதிருக்குமோ..
எங்கு கவலைகள் தொலைத்து, பயங்கள் களைந்து, தீர்ப்பிடல்களற்று சுதந்திரமாய் சுவாசிக்க முடிகிறதோ..

சிட்டுக்குருவியின் சிறகுகள் வாங்கி பறந்து செல்ல
தவிக்கிறது உள்ளம்.

எங்கு இருக்கிறது எனக்கான ஒரு இடம்?





~. ~. ஜெ. சி. நித்யா ~.~.



நான்





நான் தேவதை அல்ல.
சிலாகித்து நீ எழுதும் கவிதையின்
வர்ணனைகளில் என்னை தொலைப்பதற்கு.

நான் விளக்கும் அல்ல.
சாதுர்யமாய் நீ வகுக்கும் எல்லைகளுக்குள்
என் ஒளியை சுருக்கி கொள்வதற்கு.

சுவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்
உன் அங்கீகாரமோ அனுமதியோ தேவைப்படாத
சக மனுஷி நான்.

சம்மதமெனில் சொல்.
பூக்கள் ரசித்தபடி
சேர்ந்து நடக்கலாம்
தகுந்த இடைவெளி விட்டு.


~.~. ஜெ.சி. நித்யா ~.~

வாசித்ததில் நேசித்தது...



காலச் சுவரில் ஓவியமாய் - என்றும்
கரையா நினைவிற் காவியமாய்
நீலக்கடலில் பேரலையாய் - மனம்
நீந்தித் தீராப் பெருவெளியாய்

கோல முகிலினில் மழைத்துளியாய் - சிறு
குத்து விளக்கினிற் சுடரொளியாய்
மாலை வெயிலினில் பொன்நிறமாய் - என்
மனமென்னும் மேடையிற் சிந்தனையாய்

எல்லாக் காலமும் நீயிருப்பாய்
உயிரின் இறுதி வரையும் நீயிருப்பாய்.
                                                                          
                                                                                      - நா. பார்த்தசாரதி.


தாயுமாகி...



துள்ளித் திரியும் கால்கள். ஓரே ஓட்டமாய் ஓடி வருகிறேன் வெளியே.
“பார்த்து டா…சகதியா இருக்கு…விழுந்திடாத…” கூடவே வருகிறது அக்கறை ததும்பும் உன் குரல்.
நானாவது விழுவதாவது....லேசாய் புன்னகைத்து, இதெல்லாம் மிக சாதாரணம் என்றெண்ணியபடி தொடர்ந்து ஓடுகிறேன்..
நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. சரட்டென சறுக்கி, தடுமாறி நிலைகுலைந்து விழுகிறேன். உடம்பெல்லாம் சகதி. முழங்கால்களில் சிராய்ப்பு.
அடக்க முடியாமல் கசியத் தொடங்கிய விழிகள்… எழ முயற்சிக்கிறேன்…முடியவில்லை… ம்ம்மா விழுந்துட்டேன்…. .....” விசும்பும் எனை ஓடோடி வந்து கொஞ்சமும் யோசிக்காமல், அள்ளி எடுத்து அணைத்துக் கொள்கிறாய்.
அப்பியிருக்கும் சகதியோ ரத்தம் பெருகும் காயங்களோ அருவருக்க செய்யவில்லை உன்னை. நீ சொன்னதை அலட்சியம் செய்த என்மேல் எந்த கோபமுமில்லை.

உள்ளத்து அன்பை எல்லாம் சேர்த்தெடுத்து என்மேல் பொழிகிறாய்… "அழக் கூடாது...அதான் நான் இருக்கேன்..ல..எல்லாம் சரியாயிடும்..." என்கிறாய்...
ஆம், உன் விழிகளில் எப்போதும் நானிருக்க என்ன நேர்ந்திடும் எனக்கிங்கு?

இனி எல்லாம் சரியாகிவிடும்.



~.~. ஜெ.சி. நித்யா ~.~.


Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.