Posted by
JC Nithya
Thursday, April 19, 2012
நான் தேவதை அல்ல.
சிலாகித்து நீ எழுதும் கவிதையின்
வர்ணனைகளில் என்னை தொலைப்பதற்கு.
நான் விளக்கும் அல்ல.
சாதுர்யமாய் நீ வகுக்கும் எல்லைகளுக்குள்
என் ஒளியை சுருக்கி கொள்வதற்கு.
சுவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்
உன் அங்கீகாரமோ அனுமதியோ தேவைப்படாத
சக மனுஷி நான்.
சம்மதமெனில் சொல்.
பூக்கள் ரசித்தபடி
சேர்ந்து நடக்கலாம்
தகுந்த இடைவெளி விட்டு.
~.~. ஜெ.சி. நித்யா ~.~
Posted by
JC Nithya
Monday, February 20, 2012
காலச் சுவரில் ஓவியமாய் - என்றும்
கரையா நினைவிற் காவியமாய்
நீலக்கடலில் பேரலையாய் - மனம்
நீந்தித் தீராப் பெருவெளியாய்
கோல முகிலினில் மழைத்துளியாய் - சிறு
குத்து விளக்கினிற் சுடரொளியாய்
மாலை வெயிலினில் பொன்நிறமாய் - என்
மனமென்னும் மேடையிற் சிந்தனையாய்
எல்லாக் காலமும் நீயிருப்பாய்
உயிரின் இறுதி வரையும் நீயிருப்பாய்.
- நா. பார்த்தசாரதி.
Posted by
JC Nithya
Thursday, February 2, 2012
துள்ளித் திரியும் கால்கள். ஓரே ஓட்டமாய் ஓடி வருகிறேன் வெளியே. “பார்த்து டா…சகதியா இருக்கு…விழுந்திடாத…” கூடவே வருகிறது அக்கறை ததும்பும் உன் குரல்.
நானாவது விழுவதாவது....லேசாய் புன்னகைத்து, இதெல்லாம் மிக சாதாரணம் என்றெண்ணியபடி தொடர்ந்து ஓடுகிறேன்..
நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. சரட்டென சறுக்கி, தடுமாறி நிலைகுலைந்து விழுகிறேன். உடம்பெல்லாம் சகதி. முழங்கால்களில் சிராய்ப்பு.
அடக்க முடியாமல் கசியத் தொடங்கிய விழிகள்… எழ முயற்சிக்கிறேன்…முடியவில்லை… “ம்ம்மா விழுந்துட்டேன்…. .....” விசும்பும் எனை ஓடோடி வந்து கொஞ்சமும் யோசிக்காமல், அள்ளி எடுத்து அணைத்துக் கொள்கிறாய்.
அப்பியிருக்கும் சகதியோ ரத்தம் பெருகும் காயங்களோ அருவருக்க செய்யவில்லை உன்னை. நீ சொன்னதை அலட்சியம் செய்த என்மேல் எந்த கோபமுமில்லை.
உள்ளத்து அன்பை எல்லாம் சேர்த்தெடுத்து என்மேல் பொழிகிறாய்… "அழக் கூடாது...அதான் நான் இருக்கேன்..ல..எல்லாம் சரியாயிடும்..." என்கிறாய்...
ஆம், உன் விழிகளில் எப்போதும் நானிருக்க என்ன நேர்ந்திடும் எனக்கிங்கு?
இனி எல்லாம் சரியாகிவிடும்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, December 17, 2011
சாக நினைக்கையில்
உயிராய் தெரிகிறாய்.
எப்படி முற்றுப்புள்ளியிடுவதென
தயங்கி
மீண்டும்
வாழ முயல்கையில்
கனவாய் மறைகிறாய்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Monday, December 12, 2011
வளர்ந்து விட்டதனால்
நகர்ந்து வேறிடம் சென்றிட
உன்மேல் ஊன்றி நிற்பவை
கால்கள் அல்ல
என் வேர்கள்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
காற்றில் கிழிபடுவதற்கென்றே
விரிந்திருக்கும்
வாழை இலை போல
உன் நினைவுகளில் அலைபடுவதற்கென்றே
தவித்திருக்கும்
நெஞ்சம்..
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Monday, November 14, 2011
19B குளிர்சாதனப் பேருந்து.
அலுவலக களைப்பு.
புன்னகை மறந்த முகங்கள்.
அநேகமாக அனைத்து பயணிகளும் மென்பொருள் வல்லுநர்கள்..
மௌனமே நாகரீகமென அமர்ந்திருக்கும் ஒரு மாலைப்பொழுது.
ஒரு நிறுத்தத்தில் சட்டென மூன்று சிட்டுக்குருவிகள் உள்ளே நுழைந்தது போல, "ஐய் ..ஏசி பஸ்டா..." என்றொரு சத்தம், ஒவ்வொரு இருக்கையாய் சென்று, தொட்டு தடவிப் பார்த்த அந்த பிஞ்சு முகங்களில் அத்தனை மகிழ்ச்சி.. "இங்க பாருடி...ஸீட் பெல்ட்...." "விழாம இருக்கிறதுக்கு...."
"அம்மா...எனக்கு சாக்லேட் வேண்டாமா... ஏசி பஸ்-ல கூட்டிட்டு வந்தியே இதே போதும்."
ஒரு சிறுவன் ஓடிச்சென்று நடத்துநரிடம் "தி.நகர் வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் அங்கிள்?" எனக் கேட்க, சட்டென சிரித்த அவரோ "இன்னும் மூணு நாள் ஆகும்ப்பா" என்று சொல்ல...உடனே மூவரும் சேர்ந்து கைதட்ட...அமர்களப்பட்டது பேருந்து.
ஒரு உற்சாக தூறல் அத்தனை பேரையும் நனைக்க, அழகானது அன்றைய தினம் அந்த சின்னஞ்சிறு பூக்களால்...
~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ .
வெயில் வழிந்தோடும் பேருந்தில்
மனம் வறண்டதொரு பொழுதில் இலக்கற்று வெறித்து கொண்டிருக்கையில் திடீரென ஒரு பிஞ்சுவிரல் என்மீது பட சட்டென்று திரும்பினேன்.
"அக்கா...என் பேரு அஃப்சல்...நான் 2-ம் வகுப்பு 'பி' செக் ஷன்-ல படிக்கிறேன். நீங்க என்ன படிக்கிறீங்க அக்கா?"... ஆயிரம் நட்சத்திரங்களை கூட்டி பிழிந்த அந்த கண்கள் பார்த்து திகைத்த என்னிடம் பதில் எதிர்பாராமல் "வரேன் க்கா..டாட்டா" என சொல்லிவிட்டு ஓடிப் போய் இறங்கி விட்டாய்
அஃப்சல்....ஏன் பேசினாய்? பல வருட பழக்கம் போல் எதற்கு சிரித்தாய்?
மனம் முழுக்க நனைத்து விட்ட மழையை எப்படி ஒரு நொடியில் பொழியச் செய்தாய்?
அந்த நாளுக்கான எனது தேவை உனது சத்திய புன்னகை தானென்பது உனக்கெப்படி தெரியும்?
...
இன்றும் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் கடக்கும் போதெல்லாம் "அக்கா...எப்படி இருக்கீங்க" எனக்கேட்டுக்கொண்டு நீ வந்துவிட மாட்டாயா என்று தான் தேடுகிறேன் என் குட்டி மழைத்தூதனே...
~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ .
ஒவ்வொரு பயணமும் ஒரு அழகிய அனுபவம்...இந்த சின்னஞ் சிறிய நட்சத்திரங்களால். வாழ்வது எப்படி என்று குழந்தைகள் கற்றுத் தருகிறார்கள். மிக சுலபமாய்...
~.~. ஜெ.சி. நித்யா ~.~.