Wednesday, April 23, 2008

இருக்கிறேன்...



கண்ணாடி ஜன்னலின் வழியே
அவசர அவசரமாய் அள்ளி
பார்வைக்குள் நிரப்பி கொள்ளும்
வானத்தின் நீலம்

வர்ணமடித்த தொட்டிக்குள்
சிறைப்பட்ட செடியில்
புதிதாய் துளிர்த்திருக்கும்
சின்னஞ்சிறிய இலை

நுரைதள்ள பரிதாபமாய்
என்னை கடந்து செல்லும்
மாட்டின் அழகிய விழிகளில்
தீட்டிய கருமை

கை கழுவும் சாக்கில்
விரல்கள் அனுபவிக்கும்
மாசு நீக்கப்பட்ட
நீரின் குளிர்ச்சி

ருசியற்று உண்கையில்
மெதுவாய் எட்டிப்பார்க்கும்
அளவாய் கத்தரித்து
தட்டில் விரிக்கப்பட்ட
வாழை இலையின் மென்மை

தவிர்க்க முடியா ஆயிரம்
செயற்கை சிரிப்புகள் நடுவே
ஆச்சர்யமாய் நிகழும்
ஒரு அசல் புன்னகை

மனம் வறண்ட ஒருபொழுதில்
மின்னஞ்சலில் வந்துவிழும்
மழலை மொட்டுகளின் கண்களில்
தெறிக்கும் நிஜம்

வெற்றுக் கூச்சல்களுக்கு நடுவே
மயிலிறகாய் மனசு கோதி
உயிர் வரை ஊடுருவும்
இனிய ராகம்

என
இன்னும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை.



~.~. JC நித்யா ~.~.

11 comments:

sathish said...

//தவிர்க்க முடியா ஆயிரம்
செயற்கை சிரிப்புகள் நடுவே
ஆச்சர்யமாய் நிகழும்
ஒரு அசல் புன்னகை//

அட!!

:))

சகாராதென்றல் said...

உணர்ந்ததை உணர்த்திய விதம் அழகு நித்யா!

ரசிகன் said...

அருமையா இருக்குங்க.. ஒவ்வொரு துணுக்கும்:)

பாராட்ட வார்த்தைகள் இல்லை. அழுவாச்சி கவிதை தான் எழுதியிருப்பிங்கன்னு வந்தா,தன்னம்பிக்கையை தூண்டும் பாசிட்டிவ் வரிகள்.சூப்பர்.கலக்கிட்டிங்க போங்க:)

அதுவும் எல்லாத்துக்கும் மேல் கடைசியில் மகுடம்
//என
இன்னும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை.
//
வாழ்த்துக்கள்.இதுதான் சரியான திசை. தொடருங்க கவிதை பயணத்தை:)

ரசிகன் said...

என் பதிவில் சமிபத்தில் ரசித்த கவிதை லிஸ்ட்டுல இதையும் சேத்துடறேன்:)

// சகாராதென்றல் said...

உணர்ந்ததை உணர்த்திய விதம் அழகு நித்யா!//

ரிப்பீட்டேய்...

//sathish said...

//தவிர்க்க முடியா ஆயிரம்
செயற்கை சிரிப்புகள் நடுவே
ஆச்சர்யமாய் நிகழும்
ஒரு அசல் புன்னகை//

அட!!

:))//

டபுள் ரிப்பீட்டு:)

JC Nithya said...

இந்த அசல் புன்னகைக்கு ஒரு நன்றி Sathish! :)

உணர்த்தியதை உணர்ந்து பார்த்ததற்கு நன்றி சகாரா!

உங்கள் பின்னூட்டம் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன் ரசிகன். நன்றிகள் பல!

விஜய் said...

"என
இன்னும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை." - இது முடிவல்ல யதார்தத்தின் ஆரம்பமென எளிமையாக எடுத்துச் சொல்லும் வரிகள்.

அருமை அருமை.

JC Nithya said...

ஒரு கோப்பை தண்ணீர் கண்டு

"அரை-குவளை-காலி"
என்று சொன்ன என்னை

"அரை-குவளை-நீர்"
என்று யோசிக்க சொன்ன

உங்களுக்கு என் நன்றி விஜய்!

மஞ்சூர் ராசா said...

கவிதை முற்றுப்பெறவில்லை என தோன்றுகிறது.

இருந்தாலும் ரசிக்கவைக்கும் அழகான உணர்வுகள்

JC Nithya said...

முற்றுப்பெறவில்லை தான்... :)

நன்றி மஞ்சூர் ராசா!

ஜி said...

//செயற்கை சிரிப்புகள் நடுவே
ஆச்சர்யமாய் நிகழும்
ஒரு அசல் புன்னகை//

eppadinga kandupudikirathu?? :)))

JC Nithya said...

மனதின் பிரதிபலிப்பும்
உண்மையின் ஒளியும்
விழி வழி கசியுமே
அதை வைத்து உணரலாம் ஜி !!!