சாதிகா என்றொரு தேவதை...




அழகான இளம் மாலை
தோழியின் குழந்தைக்கு
பிறந்த நாள் விழா..
வண்ணக்காகிதம் சுற்றிய
பரிசுப்பொருளோடு
நுழைகிறேன்..

நண்பர்கள்..சிரிப்பு..
ஆடைகள்..அலங்காரம்..
நலம் விசாரிப்புகள்..
அர்த்தமற்ற மொழியாடல்கள்..
ஒவ்வொன்றாய்
கடந்து பயணித்த  என் கவனம்
உன்மீது பட்டதும்
உறைந்து நிற்கிறது.

நிஜம் ததும்பும் உனது விழிகள்.
நட்சத்திரமென மின்னும் பார்வை.
எந்த முகப்பூச்சும் தேவைப்படாத
பூமுகம்.

எந்த பாகுபாடும் இன்றி எல்லாருக்கும்
வாரி வழங்கிடும்  சிரிப்பு..
எல்லாவற்றிற்கும் கை தட்டும்
உன் உற்சாகம்...
கொள்ளை கொள்கிறது என்னை.

இமைக்காமல் நோக்கும் எனை கண்டதும்
திடீரென சிலிர்த்து  விரிகிறது
தேவதை புன்னகை...

தோழியின் முதல் குழந்தை
பெண் என்று மட்டுமே
அறிந்திருந்தேன்.
இன்று  தான் புரிகிறது
தேவதை என்று.

அள்ளி எடுத்து கொஞ்சிட
ஆசை பிறக்கிறது.

எல்லாரையும் போல்
என்னையும் நினைத்திடுவாயோ
என அஞ்சி கை அசைத்து
விடை பெறுகிறேன் .
ஒரு இனிய அனுபவத்தின்
நிறைவோடு.

மனத்தின் ஈரமும்
தூய்மையும்
சிறிதும் உலராமல்
இருக்கும்
குட்டி தேவதையே,

நீ அல்ல..

வசதிக்கேற்றவாறு
நிமிடத்திற்கொருதரம்
நிறம் மாறும்
நாங்கள் தான்
ஊனமுற்றவர்கள்.


~.~. JC நித்யா ~.~.

விசித்திரம்..






துளிர்த்து எழும் கேள்விகள்
புதைந்து அழும் காயங்கள்
திகைக்க செய்யும் குழப்பங்கள்
வெளிச்சம் இல்லா பயணங்கள்
..
எனக்கான ஒரு உலகம்

நொறுங்கி விழும்போதிலும்
...
சிதைவுகளின் நடுவே
சிறிதும் சலனமின்றி

திரிந்து கொண்டிருக்கிறது
மனம்

உனக்கான ஒரு பூவினைத்
தேடி..

  
~.~. JC நித்யா ~.~.

தெரியவில்லை..





தெரியவில்லை தான்
எனக்கு..

செயற்கையாய் புன்னகைக்க..
உணராததை உச்சரிக்க...


பணத்திற்கும் பதவிக்கும் மரியாதை கொடுக்க..
அர்த்தமற்ற வேஷங்களில் பொய்யாய் நடிக்க..

கணினித்திரையில் மழை ரசிக்க...
உயிர்சிலிர்க்கும் மழைநடுவே குடைவிரிக்க..

கையேந்தும் மழலை கண்டு
விழிஈரம் கசியாமல் நகர..

முகத்திற்காக ஒரு சிரிப்பும் முகம் மறைந்தபின்
ஒரு பேச்சுமாக பேசித் திரிய...


சிறு இலை என்னுள் ஏற்படுத்தும் பாதிப்புகளை தவிர்த்திட
இயந்திரங்களை பார்த்து பிரமிக்க... 

பயணத்தில் இதமான பூங்காற்றை அனுபவியாது
வாகன நெரிசல் பற்றி விமர்சிக்க...

சத்தியமாக
தெரியவில்லை தான்
எனக்கு..

பிழைப்புக்காக
வாழ்க்கையை விட்டுத் தர...


~.~. JC நித்யா ~.~.

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.