இருக்கிறேன்...



கண்ணாடி ஜன்னலின் வழியே
அவசர அவசரமாய் அள்ளி
பார்வைக்குள் நிரப்பி கொள்ளும்
வானத்தின் நீலம்

வர்ணமடித்த தொட்டிக்குள்
சிறைப்பட்ட செடியில்
புதிதாய் துளிர்த்திருக்கும்
சின்னஞ்சிறிய இலை

நுரைதள்ள பரிதாபமாய்
என்னை கடந்து செல்லும்
மாட்டின் அழகிய விழிகளில்
தீட்டிய கருமை

கை கழுவும் சாக்கில்
விரல்கள் அனுபவிக்கும்
மாசு நீக்கப்பட்ட
நீரின் குளிர்ச்சி

ருசியற்று உண்கையில்
மெதுவாய் எட்டிப்பார்க்கும்
அளவாய் கத்தரித்து
தட்டில் விரிக்கப்பட்ட
வாழை இலையின் மென்மை

தவிர்க்க முடியா ஆயிரம்
செயற்கை சிரிப்புகள் நடுவே
ஆச்சர்யமாய் நிகழும்
ஒரு அசல் புன்னகை

மனம் வறண்ட ஒருபொழுதில்
மின்னஞ்சலில் வந்துவிழும்
மழலை மொட்டுகளின் கண்களில்
தெறிக்கும் நிஜம்

வெற்றுக் கூச்சல்களுக்கு நடுவே
மயிலிறகாய் மனசு கோதி
உயிர் வரை ஊடுருவும்
இனிய ராகம்

என
இன்னும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை.



~.~. JC நித்யா ~.~.

வழிபாடு




சுவாசமாய் சூழ்ந்து
நினைவெங்கும் நிறைந்து

உலகமாய் விரிந்து
உயிரெங்கும் கலந்து

உதிரத்தையே உணவாக்கி தரும்
தாய்மையில் நனைந்து

உலகத்தினின்று முற்றிலும் துண்டிக்கப்பட்டு
கவலைக்கான காரணம் தொலைத்து

இனிமைகளை தவிர வேறேதும் அறியாது
தானென்ற நினைவு ஏதும் இல்லாது

தனது இருப்பை தவிர வேறெதையும் தெரிவிக்காது
இயல்பாய் இசைக்கும் மௌனத்தில் கரைந்து

தாயின் கருவறைக்குள்
சுகமாய் சுகமாய்
துயிலும் குழந்தை
போல

எனதினிய ஆலயமே,
உனக்குள் நான்

என்னை சிருஷ்டித்தவரை
நினைத்துக் கொண்டு...

~.~. JC நித்யா ~.~. 

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.