உயிர்வலி














என்னுள்

நீக்கமற நிறைந்திருக்கும்
உன்னை நுகராமல்  
என்னை அறிதல்
நெருங்கி வரும்
எவருக்கும் சாத்தியமில்லை.

நெஞ்சம் விம்மி எழுந்து
விழியில் நீராக கசியாமல்
ஒருபோதும் சொல்ல முடிந்ததே இல்லை
உன் மீதான எனதன்பை.

சுழல் காற்றில் சிக்குண்ட சருகைப்
போன்ற வாழ்க்கையில்
ஏதோ ஒரு  சலனமற்ற நிசப்த கணத்தின்
நீட்சி நீ  தான்.

சுக்கு நூறாய் உடைந்த பின்னும்
ஏதோ ஒரு சொல் என்னை 
மீண்டும் நிற்க செய்யுமெனில் 

அது உன்னுடைய வார்த்தை தான்.


என்றாவது ஓர் நாள்
"இவள் மிகவும் நேசித்தாள்"
என  சொல்லிவிடமாட்டாயா
என்றுதான் காத்திருக்கிறேன்
உயிர்வலி பொறுத்து.



~.~. ஜெ.சி. நித்யா ~.~.



இரக்கத்திற்காக...

 










எங்கு நோக்கினும்
மனிதர்கள் இலைகளை போல் உதிர்கிறார்கள்.
காலம் யாருக்காகவும் நிற்காமல்
கோரமாய் சுழல்கிறது.

வாழ்க்கை துணையை பறிகொடுத்தவர்கள்.
பெற்றோரை இழந்த பிள்ளைகள்.
அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள்.
பரிதாபமாய் நிற்கிறார்கள்
வாழ்க்கை நதியருகில்.

நான்கு சுவர்களுக்குள்
முடங்கியிருக்கும் நாங்களோ
செய்வதறியாது திகைக்கிறோம்.

தேவனே
இரக்கம் காட்ட மாட்டீரா??
கண்ணெதிரில் என் மக்கள்
செத்து மடிகின்றனரே

தவறிழைத்தவனும்
அநீதி செய்தவனும்
அக்கறையற்ற சுயநலவாதிகளும்
தேசத்தை அழிக்க நினைத்தவர்களும்
நன்றாகத்தானே வேடிக்கை பார்க்கின்றனர்

அழிந்து மடிவதெல்லாம்
அப்பாவி ஜனங்கள்தானே.

என் தேவனே என் தேவனே

உம்மை நம்பாதவர்களுக்காகவும்
சேர்த்துதான் வேண்டுகிறேன்.

இந்த வாதையை
நிறுத்த மாட்டீரா.


~.~. ஜெ.சி. நித்யா ~.~.


நகரா வாழ்க்கை















கொதிக்கும் தார் சாலையோரத்தில்

இரு சக்கர வாகன நெரிசலினிடையில் 

பரிதாபமாய் நின்றது 

வழி தவறிய வண்ணத்துப்பூச்சி ஒன்று.

இன்னும் எவ்வளவு தூரம் 

பறக்க வேண்டுமோ 

அதின் மெல்லிய இறகுகள்

புழுதி படியா பூவொன்றை கண்டுபிடிக்க.

பதறுகிறது மனம். 


சிருஷ்டிப்பு














என்னதான் நாம் பார்த்து பார்த்து நீருற்றி வளர்த்தாலும்
சிறுமழை வந்து நனைத்து போனதும்
இந்த செடியும் இலைகளும் அடைகின்ற அழகும் உற்சாகமும் 
நம்மால் ஒருபோதும் உண்டாக்க முடியாதவை.

உயிர் மலர்த்தும் இரகசியமும் மனம் நிறைக்கும் அதிசயமும் 
உருவாக்கியவருக்கே சாத்தியம் போல.


~.~. ஜெ.சி. நித்யா ~.~.


ஆற்றாமை















இப்பொழுதும் எனக்கான 
இறகொன்றை உதிர்த்துக்கொண்டுதானிருக்கிறது
அந்த பறவை தினம் தினம்.
நான் தான் கவனிப்பதில்லை.
எடுத்து பத்திரப்படுத்த நேரமுமில்லை.
பெருக்கித் தள்ளவும் மனமின்றி
வாசலின் மூலையில் குவித்து விட்டு
திரும்பி பார்க்காமல் வந்துவிடுகிறேன்
அடுப்படிக்கு.


~.~. ஜெ.சி. நித்யா ~.~.

என் ப்ரிய இயேசுவிற்கு...



















நான் உன்னை அறிந்ததில்லை.
நீயே என்னை தெரிந்தெடுத்தாய்.

நான் உன்னை தேடவில்லை.
நீயே என்னை கண்டறிந்தாய்.

அன்பின் வாசமறியாதிருந்தேன் 
நீயே என்னை நேசித்தாய்.

வாழ்தலின் பொருளறியாதிருந்தேன்
நீயே வாழ்வாகினாய்.

மதமென்ன மதம்
மனமெல்லாம் உயிரெல்லாம் 
நீயே நிறைந்திருக்கையில்.

என்னவென்று வாழ்த்துவது.
நின் பிறந்த நாளில்.
எனை ஊடுருவிய உனதன்பு
எல்லோருக்குள்ளும் வியாபிக்க வாழ்த்துகிறேன்.




~.~. ஜெ.சி. நித்யா ~.~.



மன்னியுங்கள்!













மன்னியுங்கள். 
உங்களுக்கு தேவைப்படும் 
செயற்கை புன்னகைகள் என்னிடமில்லை 
அசல் புன்னகைகளை தர விருப்பமில்லை.

மன்னியுங்கள்.
உலகெல்லாம் தீயதென கருதி கதவடைத்து வீட்டினுள் ஒளிந்துகொள்வதில் சம்மதமில்லை.
என் வழியெங்கும் நல்லவர்களை மட்டும் மனதில் சேமிக்கவே ஆசைப்படுகிறேன்.

மன்னியுங்கள்.
அடுத்தவர்களை குற்றப்படுத்துவது தான் உங்களை பக்திமான்களாக காட்டிகொள்வதெனில் எனக்கு அதில் இஷ்டமில்லை.
"உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன்" என்ற குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது எனது செல்களில்.

மன்னியுங்கள்.
உங்களை போன்றதொரு வாழ்க்கைக்கு நான் வடிவமைக்கப்படவில்லை.
எனது வாழ்க்கையின் எல்லைகள் உங்களை வரவேற்கவில்லை.


~.~. ஜெ.சி. நித்யா ~.~.


Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.