Monday, November 16, 2009

சிநேகிதம்

















கடுங்குளிர் பிரதேசத்தில்
அரிதாய் முளைத்திடும்
சிறு கீற்று வெளிச்சத்தின்
இளஞ்சூட்டைப் போல
கதகதப்பாயிருக்கிறது
உன் நினைப்பு.
வலி பள்ளத்தாக்குகளில்
அலைந்திருக்கும் எனக்கு.

.~.~.~.~.~.~.~.~

பின்னிரவின் அமைதியில்
இதமாய் மிளிர்ந்திடும்
ஒற்றை நட்சத்திரம்
போதுமானதாயிருக்கிறது.

உன் ஒளிப்புன்னகை
சிதறல்களில் ஏதேனுமொரு
சிறு சில்லை
தேடிக்கொண்டிருக்கும் எனக்கு.
.~.~.~.~.~.~.~.~

புல் அறுபட்ட வெளியின்மேல்
சுகமாய் பெய்திடும்
குளிர்ந்த மழை போல
உயிர் விளைய செய்கிறது
உன் வார்த்தைகள்.
நினைவறுந்த பொழுதில்
சரிந்துகிடக்கும் எனக்குள்.
.~.~.~.~.~.~.~.~

~.~. JC நித்யா ~.~.

Saturday, October 17, 2009

மொழிபெயர்க்கப்படாத கனவு


























ஒலியாக வெளிப்படாத சங்கீதமாய்

வரியாக முளைத்திடாத கவிதையாய்

துளியாக விழுந்திடாத மழையாய்

நெருப்பாக எரித்திடாத கனலாய்


சதா சர்வ காலமும் என்னுள்

சுழன்று கொண்டிருக்கிறாய்

உருவமில்லா இசைத்தட்டில்

நித்திய ராகமாய்...




~.~. JC நித்யா ~.~.

Saturday, October 10, 2009

தீராத தாகம்...


























ஆழ் மனவெளிகளில் என்றென்றுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது இந்த தவிப்பு.
இன்னமும் எழுதிடவில்லையே
உனக்கான ஒரு கவிதையை.

எதை பகிர்ந்திட கவிதையில்...
உணர்வின் சிறு அசைவும் புரிகின்ற தொலைவில்
நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவசிநேகிதத்தோடு
வார்த்தைகளால் பேசுதலும் வேடிக்கைதானென
பரிகசிக்கிறது என் பேனா...

பிரியங்களை பதிவிட எண்ணுகையில்,
உயிர் கசியும் இந்த பவித்திர துளிகளை விடவா
சொற்குவியல் பெரிது நேசத்தை சொல்லிட?
சினந்து கொள்கிறது விழித்திரையை
முட்டிநிற்கும் கண்ணீர்...

நின் இனிமைகளையேனும் எழுதிட நினைக்கையில்,
ஆழப் பெருங்கடலை அள்ளி எடுத்து
சிறு சிப்பிக்குள் ஊற்றிட நினைக்கும்
குழந்தையின் பேதைமை என்றே
நகைக்கிறது என் நெஞ்சம்..

எனை ஆட்கொண்ட என் தெய்வமே,
உனக்கான ஒரு கவிதையை
எழுதிடும் இந்த வாஞ்சை மட்டும்
தினம் தினம் பெருகி
வழிந்தோடி கொண்டுதானிருக்கிறது
என் நாட்களின் நிமிஷங்கள்தோறும்...



~.~. JC நித்யா ~.~.

Saturday, May 30, 2009

தகன பலி...





இதோ வந்திருக்கிறேன்
பலியிட.

இன்று இல்லையேல்
என்றும் இல்லை.

உயிர் கரைய நேசித்திடும்
விழி விரிய இரசித்திடும்
என் செல்வப் புதல்வனை

நான் நினைத்து நினைத்து
பெருமிதப்படும் ஒரேயோர் காரணத்தை

வெகுநாட்கள் கனவாகவே இருந்து
நனவானதொரு அற்புதத்தை

களங்கமில்லா நேசம் ஊற்றி வளர்த்த
உயிர் பந்தத்தை

பெற்ற வரங்களிலேயே விலைமதிப்பற்ற
என் ஜீவ பொக்கிஷத்தை

இதோ வைக்கிறேன்
பலிபீடத்தில்.

வேண்டாம் - என
இப்போதும் சொல்ல முடியவில்லை.

என்றாலும் இதோ
கீழிறக்கி வைக்கிறேன்.

கடைசியாய்
ஒருமுறை பார்த்துக் கொள்ளட்டுமா?

நேசிக்கிறேனென
ஒருமுறை சொல்லிக் கொள்ளட்டுமா?

வலித்திடுமே
மன்னிப்பு கேட்டுக் கொள்ளட்டுமா?

வேண்டாம்.
ஏதும் செய்வதற்கில்லை.

இதோ தருகிறேன்
முற்றிலுமாக.

தந்தது நீ தானே
எடுத்துக் கொள்ள
எல்லா உரிமையும் உண்டு.

கனவை நனவாக்கியது
நீ தானே
நனவை நினைவாக்க
உரிமை உண்டு.

முழுவதும் சம்மதம்.

உயிரானவரே,

உம்மை விட
உயிருக்கு நெருக்கமானதென்று
வேறேதுமில்லை.
இருந்திடவும் வேண்டாம்.

வலியுடன்,
ஆபிரகாம்.


~.~. JC நித்யா ~.~.

Sunday, August 31, 2008

காத்திருப்பு...



நீரில் நனைந்த வெற்றுத்தாளென
கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும்
ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு
நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான
உனது கவிதையை.


பூவின் இதழ் ஒன்றையும் சிதறடிக்காமல்
சுகமாய் நனைக்கும் செல்ல மழை போல
இதமாய் தூறுகிறாய் நாள்முழுவதும்
எனது கனவுகள் ஒன்றையும் பிய்த்திடாமல்.


கருவாகி உருவான விதையை
ஒரு நாளும் பார்த்திராத செடி போல
சந்திக்காமலேயே பிரிந்திருத்தலும்
பார்க்காமலேயே சேர்ந்திருத்தலும்
சாத்தியம் என்றாக்கிவிட்டு
புன்னகைக்கிறாய் சிறு பூவென.


விரிந்த அந்த வானத்தின் கிழிசல் வழியே
என்றாவதொருநாள் உன் முகம் தெரிந்திடும்
என்ற ஒரு சொட்டு நம்பிக்கையிலேயே
எரிந்து கொண்டிருக்கிறது
இந்த சின்னஞ்சிறு தீபம்
இன்னமும்...


~.~. JC நித்யா ~.~.