Monday, December 24, 2007

இரட்சகர்




புயல் காற்று.
கொந்தளிக்கும் கடல்.
முரட்டு அலைகள்.
அஞ்சிடும் நெஞ்சம்.

படகு உடைந்திடுமோ
நீச்சல் பழக்கமில்லையே

தப்பிப் பிழைத்திடுவேனா
எந்த கரையில் ஒதுங்கிடுவேனோ

ஏற்றுக் கொள்ளப் படுவேனா
எனதடையாளம் தொலைத்திடுவேனோ
குழம்பி அலைகிறது மனம்.

முற்றிலும் இருள் சூழ்ந்து
கடைசி சொட்டு நம்பிக்கையும் தீர்ந்து
திகைத்து நிற்கையில்
திடீரென ஒளி வெள்ளமென
வருகிறாய் நீ.

அகோர புயலின் நடுவிலும்
அமைதியாய் பூக்கிறது
உன் புன்னகை.
அன்பாய் அழைக்கிறது
உன் பார்வை.

என்ன நேர்ந்தது என்னுள்.
புரியவில்லை.
ஏன் இறங்குகிறேன் படகை விட்டு?
நடக்கத் துணிகிறேனா கடல் மேல்?

எல்லாம் உறைந்து போனது.
உன் முகத்தில் பதிந்த
என் பார்வை தவிர.

வேர்களை அதிரச் செய்த
அதே புயல்.
ஆழம் வரை அச்சுறுத்திய
அதே கடல்.
நம்பிக்கைகளை விழுங்கிய
அதே அலைகள்.

ஆனால்,
நடக்கிறேன் நான் !!!

எப்படி முடிகிறது?
சட்டென பார்வை விலக்கி
சூழ்நிலை பார்க்கிறேன்.
ஆழம் பார்க்கிறேன்.
என்னைப் பார்க்கிறேன்.
அவ்வளவு தான்,
மூழ்கத் துவங்குகிறேன்...

கொஞ்ச கொஞ்சமாய்
உள்ளிழுக்கிறது கடல்.
வேறேதும் செய்வதற்கில்லை.
உயிரின் ஆழத்திலிருந்து
கதறுகிறேன்
கா.ப்.பா.ற்.றி.ட. . . மா.ட்.டா.யா.?

அதே மலர் புன்னகையோடு
கேட்கிறாய்...
"ஏன் நம்பிக்கை இல்லாமல்
போயிற்று உனக்கு?"

கை நீட்டி பிடித்துக் கொள்கிறாய்
நடுங்கும் என் விரல்களை.

மெதுவாய் அமைதி கொள்கிறது
துடித்துக் கொண்டிருந்த எனதுயிர்.


எழுந்து விட்டேன்.

விடிந்து விட்டது.

~.~. JC நித்யா ~.~.

6 comments:

sathish said...

//எழுந்து விட்டேன்.

விடிந்து விட்டது.//

கனவுகலைந்து தூக்கத்திலிரூந்து எழும்பும் உடல்..
குழப்பத்திலிருந்த தெளிந்து விழிக்கும் மனம்..

- அருமை

சகாரா said...

நல்ல கவிதை நித்யா.
வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிக்கும் மனிதர்களிடம் இருக்கும் தயக்கத்தையும், பின்பு எங்கிருந்தோ திடீரென்று வரும் துணிவையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

இறுதி வரியில்,
//எழுந்து விட்டேன்.
விடிந்து விட்டது.//
அனைத்தும் கனவென உணர்த்தியிருப்பது நன்று.

- சகாரா.

sathish said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நித்யா!!

JC Nithya said...

நன்றி Sathish!
நன்றி சகாரா!!

தினேஷ் said...

உங்கள் கவிதையை படிக்கும் போது வேகத்தை ஏற்ப்படுத்துகிற ஒரு உந்துதல் இருக்கிறது. நல்ல கவிதை...

தினேஷ்

sathish said...

ஹலோ நித்யா! எப்டி இருக்கீங்க??
ரொம்ப நாளா பதிவுகள் எதுவும் இல்லையே! என்ன ஆயிற்று??

அன்பர்கள் தொடர் ஓட்டம் ஒன்றை வலைபதிவில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்! என்னையும் அழைத்தார்கள், நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்.

சென்ற வருடம் நீங்கள் பதிவிட்டதில் உங்களுக்கு மிகமிக பிடித்த மிகவும் பாதித்த பதிவு எது என்று எழுத வேண்டும்! உங்களுக்கு தெரிந்தவர்களை ஓட்டத்திற்கு அழைக்கலாம் :)