Posted by
JC Nithya
Thursday, August 27, 2015
இப்பொழுதும் எனக்கான
இறகொன்றை உதிர்த்துக்கொண்டுதானிருக்கிறது
அந்த பறவை தினம் தினம்.
நான் தான் கவனிப்பதில்லை.
எடுத்து பத்திரப்படுத்த நேரமுமில்லை.
பெருக்கித் தள்ளவும் மனமின்றி
வாசலின் மூலையில் குவித்து விட்டு
திரும்பி பார்க்காமல் வந்துவிடுகிறேன்
அடுப்படிக்கு.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Thursday, December 25, 2014
நான் உன்னை அறிந்ததில்லை.
நீயே என்னை தெரிந்தெடுத்தாய்.
நான் உன்னை தேடவில்லை.
நீயே என்னை கண்டறிந்தாய்.
அன்பின் வாசமறியாதிருந்தேன்
நீயே என்னை நேசித்தாய்.
வாழ்தலின் பொருளறியாதிருந்தேன்
நீயே வாழ்வாகினாய்.
மதமென்ன மதம்
மனமெல்லாம் உயிரெல்லாம்
நீயே நிறைந்திருக்கையில்.
என்னவென்று வாழ்த்துவது.
நின் பிறந்த நாளில்.
எனை ஊடுருவிய உனதன்பு
எல்லோருக்குள்ளும் வியாபிக்க வாழ்த்துகிறேன்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Sunday, June 22, 2014
மன்னியுங்கள்.
உங்களுக்கு தேவைப்படும்
செயற்கை புன்னகைகள் என்னிடமில்லை
அசல் புன்னகைகளை தர விருப்பமில்லை.
மன்னியுங்கள்.
உலகெல்லாம் தீயதென கருதி கதவடைத்து வீட்டினுள் ஒளிந்துகொள்வதில் சம்மதமில்லை.
என் வழியெங்கும் நல்லவர்களை மட்டும் மனதில் சேமிக்கவே ஆசைப்படுகிறேன்.
மன்னியுங்கள்.
அடுத்தவர்களை குற்றப்படுத்துவது தான் உங்களை பக்திமான்களாக காட்டிகொள்வதெனில் எனக்கு அதில் இஷ்டமில்லை.
"உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன்" என்ற குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது எனது செல்களில்.
மன்னியுங்கள்.
உங்களை போன்றதொரு வாழ்க்கைக்கு நான் வடிவமைக்கப்படவில்லை.
எனது வாழ்க்கையின் எல்லைகள் உங்களை வரவேற்கவில்லை.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Tuesday, May 6, 2014
.
சிறு வயதில் உறவுகள், பாசம், வேறேதும் முக்கியமில்லை,
படிப்பும் வெற்றியுமே முக்கியம் என்று சொல்லி குழந்தைகளை வளர்க்கிறோம்.
அவர்கள் பெரியவர்களாகி வேலையும் வசதி வாய்ப்புமே முக்கியமென வாழ நேர்கையில் அவர்களை குறைசொல்கிறோம்.
எங்கிருந்து சிதைந்து போனது அன்பின் அழகிய வேர்கள்!!
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Tuesday, December 10, 2013
எல்லா புன்னகைகளுக்கும் பின்னால் கண்களுக்கு புலப்படாத
யாரோ ஒருவரின் கண்ணீர் மறைந்திருக்கிறது.
எல்லா பெருமூச்சுகளுக்கும் கீழே உள் ஆழத்தில் ஏதோ ஒரு
வலிதரும் நினைவு மறைந்திருக்கிறது.
காண்பதெல்லாம் முழுவதும் உண்மையல்ல.
மறைந்திருப்பதாலேயே எதுவும் மதிப்பிழந்து விடுவதில்லை.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Tuesday, October 1, 2013
வாழ்க்கையை திரும்பி பார்க்கையில், நான் நானாகவே இருப்பதற்கும், என் நம்பிக்கைகளை காத்துக்கொள்வதற்குமே அதிகம் போராடியிருக்கிறேன், நிறைய இழந்திருக்கிறேன், மிகவும் காயப்பட்டிருக்கிறேன். ஆனால், அதற்காக நிச்சயம் வருந்தப்போவதில்லை...
இன்னமும் பல கேள்விகளுக்கு பதில்களில்லை.
இன்னமும் தடைகள் விலகவில்லை.
இன்னமும் உற்சாகப்படுத்தும் ஒரு குரல் கேட்கவில்லை.
...
என்றாலும் என் பாதையை எதற்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை என்ற இந்த நிறைவு அலாதியானது...
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Sunday, August 4, 2013