சக பிரயாணி



அதிகாலை அவசரம் பேருந்தில்.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய்.
இடம் கிடைத்த மகிழ்ச்சியில்
உன்னருகில் அமர்கிறேன் நான்.

மையிட்ட கண்கள்.
மின்னிடும் சிறிய மூக்குத்தி.
அழகாக வாரி முடித்த கூந்தலில் கதம்பப் பூ.
பூப்போட்ட புடவை.
கலகலக்கும் கண்ணாடி வளையல்கள்.
கன்னத்தில் கையூன்றி வேடிக்கை
பார்த்துக்கொண்டு வருகிறாய் நீ.
என் தமிழ் மண்ணின் பெண்ணழகை ரசிக்கிறேன் நான்.

திடீரென ஒரு குரல் கல்லெறிகிறது,
நம் இருவரின் மௌனத்திலும்.
அந்த நடத்துனர் தான்!!!
உன்னைப் பார்த்து, "எங்கே தங்கியிருக்க?"
என்று அதிகாரமாய் கேட்க,
பதறிப் போய் உன்னைப் பார்க்கிறேன்.

நீயோ தயங்கி, மெதுவாய் திரும்பி பதில் சொல்கிறாய்.
... வார்த்தைகள் அல்ல.
உன் குரல் மட்டுமே என் செவி சேர்கிறது.
பெண்ணின் குரல் இல்லையே!!!
....
அப்படியென்றால், நீ . . . நீ. . . அ வ ள் இல்லையா?
அவளாகியிருக்கும் . . . அவனா?
அதிர்ந்து போகிறேன் நான்.

அடுத்தடுத்து கேள்விக்கணைகள் பாய்ந்து வருகிறது,

உன்னை நோக்கி,
ஒரு அஃறிணையிடம் பேசும் தொனியில்.
எந்த ஊரு? --- சேலம்.
சம்பாதிக்கிற காசையெல்லாம் இன்னா செய்வ? -- ஒரு பார்வை.
அம்மா அப்பா விரட்டி விட்டாங்களா? -- மெதுவாய் ஒரு தலையசைப்பு.
ஓடி வந்துட்டியா? -- மவுனம்
போய் பாக்கவேயில்லையா? -- . . .
இனி சேத்துக்க மாட்டாங்களா? -- . . .

ஐயோ... உன் விழியோரம் ஈரம் கசிந்து... சிந்தப் பார்க்கிறது!
இப்படி எத்தனை முறை குத்திக் கிழித்திருக்கும்
இந்த சமூகம் அதே இரணங்களை திரும்பத் திரும்ப.

ஒரே ஒரு முறை என்னை சந்திக்க துணிகிறது உன் கண்கள்.
அந்த ஒரு துளி பார்வையில்,
மெலிதாய் ஒரு ஏக்கம்,
மெல்லியதாய் ஒரு கோபம்,
கொஞ்சம் தவிப்பு, சிறிது விரக்தி எல்லாம் இருந்தது.

எனக்கு உன் விரல்களை பிடித்துக்
கொள்ள வேண்டும் போலிருந்தது கண்ணம்மா.
உன் வேதனை புரிகிறதெனக்கு என்று
சொல்ல வேண்டும் போலிருந்தது.

படைப்பில் ஒரு எழுத்துப் பிழையா நீ? இல்லையே.
என் இறைவன் ஒரு போதும்
பிழை செய்வதில்லையே!!!

நான் ரசித்த உனது அந்த நளினம்
எத்தனை பெண்களிடம் இல்லை...

உனக்கிருக்கும் வாழும் துணிவும், துடிப்பும்,
எத்தனை ஆண்களிடம் இல்லை...

கண்ணீரை அடக்கிய உன் சக்தி,
சிறுமையை எதிர்கொண்ட உன் தைரியம்
எத்தனை மனிதர்களிடம் இல்லை...
என்றெல்லாம் சொல்ல வேண்டும் போலிருந்தது...

நிறுத்தம் வந்துவிட்டது.
இருவரும் இறங்குகிறோம்.
எதிரெதிர் திசையில் நடக்கிறோம்.
மனம் கனத்துப் போயிருக்கிறது.

நாள் முழுவதிலும் விழியோரத்தில்
ஒரு நீர்த்துளி உருண்டு கொண்டிருக்கிறது.
என்னைப் போலவே
கோழையாய்...

~.~. JC நித்யா ~.~.

அஞ்சலி...20.2.2008




உதிரும் இலைகளின் மரணத்திற்காக
நிற்பதில்லை பூமியின் சுழற்சி.

நிகழ்ந்து மடியும் நிமிஷங்களின் மரணத்திற்காக
நிற்பதில்லை மனிதனின் செயல்கள்.

ஆனால்,
நான் நிற்கிறேன் இங்கு
உ. .தி. .ர். .ந். .த. . மலரே,
உனக்கு அஞ்சலி செலுத்த.

வாழ்ந்த நிமிஷங்களிலெல்லாம்

மகரந்தங்களால் வாசனை தூவி,

கூம்பியிருந்த மனங்களை மலர்த்தி,

நசுக்கியவருக்கும் நறுமணம் ஈந்து,


உன்னத பணி செய்கிறோம்
என்ற பெருமை சிறிதுமின்றி,

படைத்தவரின் நோக்கம்
பிறழாமல் நிறைவேற்றி,

மகிழ்ச்சியாய் மரித்தாயோ...
நறும் பூவே,

நீ ஒன்றும் மண்ணில் வீழ்ந்திடவில்லை
மற்றுமொரு சருகாய் மாறிவிட...

என்னைப் போலவே
உன்னை நேசிக்கும்
ஆயிரமாயிரம் மனங்களில்
விழுந்திருக்கிறாய் விதையாக.

மீண்டும் முளைத்திடுவாய்,
உனைப்போல் வாழும் ஆசையை
துளிர்க்கச் செய்வாய்,
என்றென்றுமாக வாழ்ந்திருப்பாய்,

வாடாத நினைவாக...


கசியும் விழிகளுடன்,
JC நித்யா.

"ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!"



இந்த தொடர் ஓட்டத்தில் எழுத அழைத்த Sathish க்கு என் நன்றி!
எனது மொத்த பதிவுகளே 5 தானே Sathish!
இதில் எதை குறிப்பிடுவது? :)
ஏதோ ஒரு வலி நேரத்தில் எழுதப்பட்டது தான் ஒவ்வொன்றுமே.

எந்த தேடல் என்னை வாழச் செய்கிறதோ
எந்த தேடல் என்னை வளரச் செய்கிறதோ...

எந்த தேடல் என்னை எரியச் செய்கிறதோ
எந்த தேடல் என்னை எரித்துக் கொண்டிருக்கிறதோ...

எந்த தேடல் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கியதோ
எந்த தேடலில் நான் முற்றிலும் தொலைந்து போகிறேனோ...

அதைப் பற்றி எழுதியதே நான் நேசிக்கும் ஒன்று.

இந்த தேடல் தான் என் சுகம்.
இந்த சுகம் தான் என் வலி.
இதுவே நான்.

கை நீட்டும் குழந்தையை
பிடித்துக் கொள்ளும் தாயின் விரல்கள்...

துவண்டு நிற்கும் கன்றுக்குட்டியைத்
தடவி கொடுக்கும் தாய்ப் பசு...

புழுதிச் சாலையில் செல்லும் பேருந்திற்குள்
ஒரு சில நிமிடங்கள் வந்து சென்ற வண்ணத்துப்பூச்சி...

சரிவிகிதத்தில் ஈரமும் இதமும் கலந்து
சில்லென்று முகத்தில் மோதிச் செல்லும் காற்று...

கவனிக்க யாருமில்லை எனினும்
ஆனந்தமாய் புன்னகைக்கும் காட்டுப் பூக்கள்...

நேற்று பெய்த மழையில் குளித்ததினால்
மகிழ்ச்சியோடு சிரித்திருக்கும் இலைகள்...

இப்படி எதெதிலோ
.உ.ன்.னை.
தேடிக் கொண்டிருக்கும்
நான்...



இரட்சகர்




புயல் காற்று.
கொந்தளிக்கும் கடல்.
முரட்டு அலைகள்.
அஞ்சிடும் நெஞ்சம்.

படகு உடைந்திடுமோ
நீச்சல் பழக்கமில்லையே

தப்பிப் பிழைத்திடுவேனா
எந்த கரையில் ஒதுங்கிடுவேனோ

ஏற்றுக் கொள்ளப் படுவேனா
எனதடையாளம் தொலைத்திடுவேனோ
குழம்பி அலைகிறது மனம்.

முற்றிலும் இருள் சூழ்ந்து
கடைசி சொட்டு நம்பிக்கையும் தீர்ந்து
திகைத்து நிற்கையில்
திடீரென ஒளி வெள்ளமென
வருகிறாய் நீ.

அகோர புயலின் நடுவிலும்
அமைதியாய் பூக்கிறது
உன் புன்னகை.
அன்பாய் அழைக்கிறது
உன் பார்வை.

என்ன நேர்ந்தது என்னுள்.
புரியவில்லை.
ஏன் இறங்குகிறேன் படகை விட்டு?
நடக்கத் துணிகிறேனா கடல் மேல்?

எல்லாம் உறைந்து போனது.
உன் முகத்தில் பதிந்த
என் பார்வை தவிர.

வேர்களை அதிரச் செய்த
அதே புயல்.
ஆழம் வரை அச்சுறுத்திய
அதே கடல்.
நம்பிக்கைகளை விழுங்கிய
அதே அலைகள்.

ஆனால்,
நடக்கிறேன் நான் !!!

எப்படி முடிகிறது?
சட்டென பார்வை விலக்கி
சூழ்நிலை பார்க்கிறேன்.
ஆழம் பார்க்கிறேன்.
என்னைப் பார்க்கிறேன்.
அவ்வளவு தான்,
மூழ்கத் துவங்குகிறேன்...

கொஞ்ச கொஞ்சமாய்
உள்ளிழுக்கிறது கடல்.
வேறேதும் செய்வதற்கில்லை.
உயிரின் ஆழத்திலிருந்து
கதறுகிறேன்
கா.ப்.பா.ற்.றி.ட. . . மா.ட்.டா.யா.?

அதே மலர் புன்னகையோடு
கேட்கிறாய்...
"ஏன் நம்பிக்கை இல்லாமல்
போயிற்று உனக்கு?"

கை நீட்டி பிடித்துக் கொள்கிறாய்
நடுங்கும் என் விரல்களை.

மெதுவாய் அமைதி கொள்கிறது
துடித்துக் கொண்டிருந்த எனதுயிர்.


எழுந்து விட்டேன்.

விடிந்து விட்டது.

~.~. JC நித்யா ~.~.

அறுந்த சிறகுகள்...




...என்ன இது?
கூட்டை கலைத்து
பறக்க பழக்கும்
தாயின் பயிற்சி முறையா?

மலர்களால் வேயப்பட்ட
இதமான இந்த கூட்டிலிருந்து...

சுகமான உனது சிறகுகளின்
அரவணைப்பிலிருந்து...

பசிக்கத் துவங்கும் முன்பே
உணவு ஊட்டும்
உனது அக்கறையிலிருந்து...

புதைந்திருந்த காயங்களைக் கூட
தேடித் தேடி மருந்திட்ட
உனது பரிவிலிருந்து...

விட்டு விலகி
எங்கு போகச் சொல்கிறாய்?

தனியாய் பறந்து திரிதலும்
தானாய் உணவு தேடலும்தான்
வளர்ச்சிக்கு அடையாளமென்கிறாய்.
அதிர்ந்து போகிறது மனம்.

இன்னும் சில காலம்
உனது சிறகுகளிலேயே
தூக்கி சுமந்திட மாட்டாயா?
ஏங்குகிறது நெஞ்சம்.

யிர் வர்த்த தாய்மையே,

க்கான எல்லாமும்
நீயாக இருக்கிறாயே.

தைட்டும் பிரித்து
டுத்துச் செல்து
"நான்" என்று பெரிட்டு ???

~.~. JC நித்யா ~.~.

அவரின் பார்வையில்...





அழகாய் அசையும அந்த இலைகளின் மேல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது.

அதே இரணம்! அதே வலி! எத்தனை முறை கேட்டாயிற்று இதே கேள்வியை... திரும்பத் திரும்ப... இன்னமும் பதிலில்லை. காயமும் ஆறவில்லையே...

எப்பொழுது ஏற்பட்டது இந்த காயம்?

பள்ளி நாட்கள் ! வருடந்தோறும அவளது பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.அந்த முறை, அவளின் வகுப்பு ஆசிரியை அவளை கூப்பிட்டு,
"மேரியாக நீ நடிக்கிறாயா?" என்று கேட்டார்கள். ஒரு நிமிடம், அவளுக்கு எங்கோ பறப்பது போல இருந்தது. "சரி டீச்சர்" என்று சந்தோஷமாய் சொன்னாள் . கிறிஸ்துமஸ் விழா நாடகத்தில் தான் மேரியாக நடிக்கப்போவதை தோழிகளிடமும வீட்டிலுள்ளவர்களிடமும சொல்லி சொல்லி பெருமைபட்டுக்கொண்டாள்.

அன்று ஒத்திகை நாள் ! அவள் அமர்ந்து தனக்கு முன் இருந்த வைக்கோல் மீது பாலகனாய் படுத்திருந்த இயேசு கிறிஸ்துவை தட்டிக் கொடுத்தபோது, அவளுக்குள் அத்தனை மகிழ்ச்சி... அவள் முகத்தில் அத்தனை பரவசம்...

அப்பொழுது தான் அது நேரிட்டது! எங்கிருந்தோ ஒரு ஆசிரியை வேக வேகமாக வந்தார்கள். "இது என்ன? மேரியாக நடிப்பதற்கு இந்த பிள்ளையை போய் போட்டிருக்கீங்க? மேரின்னா அழகா இருக்க வேணாம்?"...

அவளின் சின்ன இதயத்தை குத்திக் கிழித்த வார்த்தைகள்! அதற்கு பின் நடந்தவை அவளை பெரிதாக பாதிக்கவில்லையெனினும் அந்தக் கேள்வி
அவளுக்குள் ஆறாத இரணமாய் பதிந்து விட்டது.

"நான்ன்கால்லை?" - இதுதான் அவளது நெஞ்சில் ஏற்பட்ட காயம்... அவளது வேதனை... வலி. அதன் பின்னர் அந்தக் காயத்தை யாராவது உரசிப்
பார்க்கும் போதெல்லாம் துடித்துப் போய் விடுவாள் அவள்...

"ச்சே... திரும்பத் திரும்ப அழுது மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? " என்று நினைத்தவள் காகிதத்தையும் பென்சிலையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். ஓவியம் வரைவதென்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இரண்டரை மணி நேரம் கடந்திருந்தது அவள் அந்த ஓவியத்தை முழுவதும் வரைந்து முடித்த போது... ஒரு ராஜஸ்தானிய பெண்ணை அப்படியே ஓவியமாக்கி இருந்தாள்... அவள் வரைந்தது அவளுக்கே ரொம்பப் பிடித்துப் போய் விட்டது.

"நான் இதுவரை வரைந்ததிலேயே இதுதான் பெஸ்ட்! ஜஸ்ட் பர்ஃபெக்ட்! " என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். அந்த ஓவியத்தை தன் அறை சுவரில் ஒட்டியும் வைத்தாள்.

அன்று இரவு, அவள் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அந்த ஓவியத்தை பார்த்து விட்டு, "இதென்ன? இவ்வளவு மோசமான ஒரு ட்ராயிங்!" "ரொம்ப நல்லாயிருக்குன்னு சுவரில் வேற ஒட்டி வைச்சிருக்கிறயாக்கும்? " "அந்த முகத்திற்கும் கண்ணிற்கும் பொருத்தமே இல்லை" "சுத்தமா நல்லாயில்ல..." என்று ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள்.

அவள் திடுக்கிட்டு போனாள்... சிறிது நேரம் கழித்து, தனியாக இரவின் அமைதியில், விளக்கு வெளிச்சத்தில், தன் ஓவியத்தை நன்றாக உற்றுப் பார்த்தாள். எல்லா கோணங்களிலும் தள்ளி நின்று பார்த்தாள். அவளுக்கு அதில் ஒரு குறையும் இருப்பதாக தோன்றவில்லை. மாறாக, முன்பை விட இன்னும் அழகாக, இனிமையாகத் தெரிந்தது அந்த ஓவியத்தில் இருந்த பெண்ணின் முகம்.

"என்ன மனுஷங்க இவுங்க... ரசனையே இல்லை... இவ்வளவு அழகா இருக்கிறதப் போய் 'நல்லாயில்லன்னு சொல்ல எப்படித்தான் இவங்களுக்கு மனசு வந்துச்சோ... என் கண்களுக்கு இந்த ஓவியம் எவ்வளவு அழகாக தெரிகிறது" என்று நினைத்தவளின் உள் ஆழத்திலிருந்து...
மெல்லிய குரல்... அவளின் பிரியமான ஜீசஸின் தெளிவான குரல்... "அப்படித்தான் மகளே, என் கண்ணில் நீயும் தெரிகிறாய்"... அவ்வளவு தான்! ஆயிரம் ரோஜா இதழ்களை மழையாய் பொழிந்தது போல் குளிர்ந்து போனது அவள் மனம்!

"இந்த மனிதர்களின்
மதிப்பீடுகளின்படியும்
அளவுகோல்களின்படியும்
நான் எப்படி இருந்தால்தான் என்ன?

சர்வ சிருஷ்டிக்கும் ஆண்டவராகிய
என் தெய்வத்தின் பார்வையில்,
என்னை உருவாக்கியவரின் பார்வையில்,
என் நேசரின் பார்வையில்
நான் காய் ருக்கிறேன்...
வேறென்ன வேண்டுமெனக்கு? ..."

மருந்திடப்பட்டுவிட்டது... அவளது இரணம் !

கிடைத்துவிட்டது... அவள் கேள்விக்கான பதில்!

"என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை."
( பைபிள்: உன்னதப்பாட்டு 4:7 )


~.~. ஜெ.சி.  நித்யா ~.~.


[ 'நல்ல நண்பன்' ஜூன் 2004 - மாத இதழில் வெளியிடப்பட்டது]

வறட்சி பிரதேசம்

















கடும் பசியில் வயிறு எரிந்தாலும்

சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக
யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும்
அந்த சின்னஞ் சிறு குழந்தையை
நான் கண்டு கொள்ளாமல் நகரும் போது...

கல்லூரி கேண்டீனில்
குளிர் பானங்களை எடுத்து கொடுத்து விட்டு
எங்களையும் எங்கள் சுடிதார்களையும்
தாகத்தோடு பார்க்கும்
அந்த ஏழைச் சிறுமியின் பார்வையை
நான் நாசூக்காய் தவிர்க்க முற்படும் போது...

பேருந்து நிலைய வாசலில்
வீங்கிப் போய் விகாரமாயிருக்கும்
தனது கால்களை காண்பித்து
ஏதாவது கேட்கும்
அந்த மனிதனைப் பார்த்து
"அய்யோ பாவம்" என்று
நான் முகத்தை திருப்பிக் கொள்ளும் போது...

வெட்கப் படுகிறேன்.
சுகமாயிருக்கும் இந்த
எனது நிலை குறித்து.

வலியுணர்கிறேன்.
ஈரமற்ற இயந்திர வாழ்க்கையில்
வறட்சி பிரதேசமாய்
மாறிப் போன
எனது மனதை நினைத்து.

"பசியாயிருந்தேன்,
நீங்கள் எனக்கு போஜனங்கொடுக்கவில்லை.
தாகமாயிருந்தேன்,
நீங்கள் என் தாகத்தை தீர்க்கவில்லை.
வியாதியாயிருந்தேன்,
நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை.

மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு
நீங்கள் எதை செய்யாதிருந்தீர்களோ
அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்."
( பைபிள்: மத்தேயு 25:42-45)


~.~.  ஜெ.சி.  நித்யா ~.~.



Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.