புயல் காற்று.
கொந்தளிக்கும் கடல்.
முரட்டு அலைகள்.
அஞ்சிடும் நெஞ்சம்.
படகு உடைந்திடுமோ
நீச்சல் பழக்கமில்லையே
தப்பிப் பிழைத்திடுவேனா
தப்பிப் பிழைத்திடுவேனா
எந்த கரையில் ஒதுங்கிடுவேனோ
ஏற்றுக் கொள்ளப் படுவேனா
எனதடையாளம் தொலைத்திடுவேனோ
குழம்பி அலைகிறது மனம்.
முற்றிலும் இருள் சூழ்ந்து
கடைசி சொட்டு நம்பிக்கையும் தீர்ந்து
திகைத்து நிற்கையில்
திடீரென ஒளி வெள்ளமென
வருகிறாய் நீ.
அகோர புயலின் நடுவிலும்
அமைதியாய் பூக்கிறது
உன் புன்னகை.
அன்பாய் அழைக்கிறது
உன் பார்வை.
என்ன நேர்ந்தது என்னுள்.
புரியவில்லை.
ஏன் இறங்குகிறேன் படகை விட்டு?
நடக்கத் துணிகிறேனா கடல் மேல்?
எல்லாம் உறைந்து போனது.
உன் முகத்தில் பதிந்த
என் பார்வை தவிர.
வேர்களை அதிரச் செய்த
அதே புயல்.
ஆழம் வரை அச்சுறுத்திய
அதே கடல்.
நம்பிக்கைகளை விழுங்கிய
அதே அலைகள்.
ஆனால்,
நடக்கிறேன் நான் !!!
எப்படி முடிகிறது?
சட்டென பார்வை விலக்கி
சூழ்நிலை பார்க்கிறேன்.
ஆழம் பார்க்கிறேன்.
என்னைப் பார்க்கிறேன்.
அவ்வளவு தான்,
மூழ்கத் துவங்குகிறேன்...
கொஞ்ச கொஞ்சமாய்
உள்ளிழுக்கிறது கடல்.
வேறேதும் செய்வதற்கில்லை.
உயிரின் ஆழத்திலிருந்து
கதறுகிறேன்
கா.ப்.பா.ற்.றி.ட. . . மா.ட்.டா.யா.?
அதே மலர் புன்னகையோடு
கேட்கிறாய்...
"ஏன் நம்பிக்கை இல்லாமல்
போயிற்று உனக்கு?"
கை நீட்டி பிடித்துக் கொள்கிறாய்
நடுங்கும் என் விரல்களை.
மெதுவாய் அமைதி கொள்கிறது
துடித்துக் கொண்டிருந்த எனதுயிர்.
எழுந்து விட்டேன்.
விடிந்து விட்டது.
~.~. JC நித்யா ~.~.