மூடியற்ற முகம்

 














எல்லாருக்கும் ஒரு முகம் இருக்கிறது 
ஊருக்கு காண்பிக்க...

அழகாய் அலங்கரிக்கப்பட்ட பொழுதில்... 
சூரிய வெளிச்சத்தில் இயற்கை பின்னணியில்.
அந்நிய மண்ணில் அடையாளம் இழக்காமல்... 
நண்பர்களோடு விளையாடினபோது...
 கனவு கண்ட பணியிடத்தில்... 
உயிருக்குயிராய் நேசிக்கும் நபரோடு... 
ஒரு நாய்குட்டியோடு அல்லது ஒரு பறவையோடு 
எல்லா செல்வத்திலும் மேலான குழந்தைகளோடு...

சற்று மெருகேற்றி...சற்று ஒளி கூட்டி...
அழகாய் பகிர எல்லாருக்கும் ஒரு முகம் இருக்கிறது... 

அவள் இன்னமும் தேடுகிறாள்.
தனது முகங்களின் குவியலுக்குள்.
மாசற்ற அன்பினால் நிறைந்து 
மனமகிழ்ந்து சிரித்த பொழுதொன்றின் முகத்தை...

~.~. ஜெ.சி. நித்யா ~.~.
25 May 2024.


ஏன்?

 


















ஏதுமில்லை.

எல்லாம் அற்று அகன்று
தனித்திருக்கிறேன்.

எதைக் கொண்டாடுவது?
இத்தனை வருஷங்கள் வாழ்ந்ததையா
இன்னும் எத்தனை நாட்கள்                                    
என்று கூட தெரியா                    
இந்நிலையையா

எதற்கு இத்தனை தூரம் வந்தேன்
தெரியாது.
ஏனிருக்கிறேன் இன்னும்
தெரியாது.

யாருக்காக வாழ்வது
கையில் எதுவுமில்லை.
வெறுமையாய் நிற்கிறேன்.
வாழ்வின் விளிம்பில்.

இருதயத்தின் சதையை
பிய்த்தெடுப்பது போல்
தாள முடியா வலி.

எனக்கான வெளிச்சம் எங்குமில்லை.
எனக்கான நேசம் எங்குமில்லை.
நொறுங்கி இருக்கிறேன்.
முற்றிலுமாய்.


என் தேவனே என் தேவனே                                        
எனக்கான நின் பாதை 
இங்கிருந்து தான் தொடங்குகிறதா?

எல்லாவற்றையும் இழந்த பின் தான்
என் சிலுவை எது என்ற புரிதல் வருமா?

உனையன்றி உறவேதுமில்லை.
நீயின்றி வாழ்வேயில்லை.

வேறெங்கு செல்வேன்?
ஜீவனே நீயாக இருக்கையில்.

முடிவின் புள்ளியில்
குவிந்திருக்கிறது 
துவக்கத்தின் ஊற்று.


Nithya JC.
15 May 2024.

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.